தறிகெட்டு ஓடி கிணற்றில் பாய்ந்த கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி - ஊரே திரண்டு கண்ணீர் அஞ்சலி!

 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் திண்டோரி பகுதியில் நடந்த கோர விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரே கிராமத்தைச் சேர்ந்த தர்கோடே குடும்பத்தினர், திண்டோரி சிவாஜிநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார் பள்ளியின் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து தங்களது இர்டிகா காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மண்டபத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சுமார் 50 அடி ஆழமுள்ள, நீர் நிரம்பிய கிணற்றுக்குள் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுனில் தத்தாத்ரேய தர்கோடே (35), ரேஷ்மா சுனில் தர்கோடே (33) மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ராக்கி, ஆஷா, மாதூரி, ஸ்ராவணி மற்றும் சிருஷ்டி (16), ஸ்ரேயாஷ் (11) மற்றும் சம்ருதி (7) என 5 பள்ளி மாணவர்கள் என அடையாளம்  காணப்பட்டுள்ளது. 

இரவு நேரம் என்பதாலும், கிணற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்ததாலும் மீட்புப் பணியில் ஆரம்பத்தில் தொய்வு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற திண்டோரி நகரப் பஞ்சாயத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியைத் தொடங்கினர். நள்ளிரவில் பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்து கார் மற்றும் 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

கார் தலைகீழாகக் கவிழ்ந்ததில் கதவுகளைத் திறக்க முடியாமல் போனதாலும், கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததாலும், காருக்குள் தண்ணீர் வேகமாகப் புகுந்து அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டோரி கிராமப்புற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.