பட்டப்பகலில்  குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்...  சிசிடிவி வீடியோ!

 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மணிகொண்டா பகுதியில், பட்டப்பகலில் குழந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுத் தப்பியோடிய அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரச் செயலின் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பாராத இந்தத் திடீர் பாலியல் அத்துமீறலால் நிலைகுலைந்து போன அந்தப் பெண், அலறியடித்தபடி பின்னால் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த அவசரப் புகாரின் பேரில், ஐதராபாத் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் பெண்ணின் கற்புக்குப் பங்கம் விளைவித்தல் மற்றும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் (Stalking) ஆகிய குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சுமார் 50 முதல் 60 சிசிடிவி கேமரா காட்சிகளைத் தற்பொழுது காவல் துறையினர் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள அந்த மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர். சாமானியப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பொதுவெளியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை இந்தச் சசிடிவி வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.