வெறிச்சோடிய சென்னை... வாக்களிக்க சென்னையில் இருந்து 19.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்காக, சென்னையில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் கடந்த சில தினங்களாகச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதனால் சென்னை மாநகரமே ஆள் அரவமற்று வெறிச்சோடி காணப்பட்டது.
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் இருந்து சுமார் 10,169 அரசுப் பேருந்துகள் மற்றும் 6,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட வழக்கமான மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 9 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர். கார் மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் சுமார் 60,000 பேர் வரை பயணம் செய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 19.5 லட்சம் பேர் தேர்தலுக்காகச் சென்னையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பொதுமக்களின் இந்த மாபெரும் வெளியேற்றம் மற்றும் தேர்தல் விடுமுறை காரணமாகச் சென்னையின் முக்கியச் சாலைகளான அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின. பெரும்பாலான கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்ததால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை மாநகரம் நேற்று வழக்கத்திற்கு மாறான அமைதியுடன் காணப்பட்டது.