வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டியதில் 2-ம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலத்தில் வாழை மரத்தை வெட்டியபோது எதிர்பாராதவிதமாகக் குளவிக் கூடு கலைந்து தாக்கியதில் 8 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில், 2-ஆம் வகுப்பு படித்து வந்த நிச்சித் (8) என்ற சிறுவன் தனது தந்தை வெங்கடேஷுடன் தோட்டத்தில் இருந்துள்ளான். தோட்டத்தில் இருந்த வாழை மரத்தை வெட்டியபோது, அதில் மறைந்திருந்த குளவிக் கூடு எதிர்பாராதவிதமாகக் கலைந்தது. கூட்டமாக வந்த குளவிகள் தந்தையையும் மகனையும் சரமாரியாகக் கொட்டின.
குளவிகளின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் நிச்சித், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தந்தை வெங்கடேஷ் சாகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துச் சாகர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.