அதிர்ச்சி... மசூதியில் மதகுரு கொலை... முகமூடி நபர்கள்  வெறிச்செயல்!

 
 

இன்று அதிகாலை முகமூடி அணிந்த நபர்கள், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள ஒரு மசூதி ஒன்றில் மதகுருவைக் கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீரில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் காஞ்சன் நகரில் உள்ள முகமதி மதீனா மசூதியின் மதகுரு முகமது மாஹிர் (30). உத்தரபிரதேசத்தின் ராம்பூரை சேர்ந்த இவருடன் மசூதியில் சில சிறுவர்களும் மசூதியில் வசித்து வந்தனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மசூதிக்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த 3 மர்ம நபர்கள், முகமது மாஹிரை கொலை செய்தனர். மசூதிக்குள் இருந்த  6 சிறுவர்களை, சத்தம் போடக்கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள், மாஹிரைக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். 
மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதும் சிறுவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

 

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரியவந்தது.தகவலறிந்த ராம்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் ரவீந்திர கிஞ்சி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, முகமது மாஹிரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மசூதி அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடந்து வருகின்றனர்