கலெக்டர் செல்போனை ஹேக் செய்த உதவியாளர்கள்... ரகசியங்களைக் கசியவிட்ட 3 பேர் கைது!
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் பிரதீப் நாராயண் யாதவின் அலுவலகத்திலிருந்து, மிக முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்கள் தொடர்ந்து வெளியே கசிந்து வந்தன. இந்த விவகாரம் மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆட்சியரின் அலுவலகத்திலேயே பணியாற்றி வந்த சிலரே இந்தத் துரோகத்தைச் செய்தது அம்பலமானது.
மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உதவியாளர்களாக வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள் இணைந்து, ஆட்சியரின் செல்போனை ஹேக் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியரின் கைப்பேசியைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அவர்கள், ரகசியமாகக் கண்காணித்துத் தகவல்களைத் திருடி வந்துள்ளனர். ஆட்சியரின் ஒவ்வொரு நகர்வையும், அவர் பகிரும் முக்கியத் தரவுகளையும் இதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்குக் கசியவிட்டு வந்துள்ளனர்.
ஆதாரங்களுடன் சிக்கிய அந்த 3 உதவியாளர்களையும் போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசுப் பணியில் இருந்துகொண்டே மாவட்டத்தின் உயர் அதிகாரியின் செல்போனையே ஹேக் செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குப் பின்னால் வேறு ஏதேனும் மர்ம கும்பல் உள்ளதா அல்லது யாருடைய தூண்டுதலின் பேரில் இவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.