காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் கத்திக்குது... உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

 

தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில், தன்னைக் காதலிக்க மறுத்த காரணத்திற்காக 19 வயது இளம்பெண்ணை, வாலிபர் ஒருவர் நடுரோட்டில் கத்தியால் கொடூரமாகக் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சுவஸ்திக் சிக்னல் அருகே நேற்று மாலை இந்த விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் சாலையைக் கடக்க முயன்ற போது, அங்கு வந்த வாலிபர் அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இளம்பெண் அவரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் அடுத்தடுத்துக் கொடூரமாகக் குத்தியுள்ளார்.

இளம்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த வாலிபர், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளம்பெண்ணிற்குத் தற்பொழுது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரக் கால அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய வாலிபர் கடந்த சில மாதங்களாக அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறித் தொந்தரவு செய்து வந்ததும், அதற்கு அந்தப் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே வாலிபர் இந்தத் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளார்.

இது குறித்துப் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் முறைப்படி வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்க முயன்ற அந்த வாலிபரைத் தனிப்படை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.