டெல்லியில் மீண்டும் ஒருவர் சுட்டுக்கொலை: ஒரே மாதத்தில் அரங்கேறிய 3-வது துப்பாக்கிச் சூடு சம்பவம்!

 

தலைநகர் டெல்லியில் உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே காலை நேரத்தில் பயிற்சியாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு தில்லி பகுதியில் உள்ள அயா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருபவர் மீது இன்று காலை 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், உடற்பயிற்சி கூடத்தின் வாசலிலேயே அவரை மறித்து சுமார் 12 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் தில்லியில் உள்ள ஜிம் வாயில்களில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் கொல்லப்பட்டதும், செப்டம்பர் 3-ஆம் தேதி நரேலா பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் பிரமோத் தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் கொலைகளுக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.