பச்சிளம் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை... இமாலய சாதனை!
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த மருத்துவத் தம்பதிக்கு 33 வயதில் கருவுற்ற நிலையில் அரிய வகை இதயக் குறைபாட்டுடன் குழந்தை பிறந்தது. நுரையீரலில் இருந்து வரும் ரத்தம் இதயத்திற்குச் சரியாகச் செல்லாத இந்த ஆபத்தான நிலையைக் கண்டறிந்த டெல்லி மருத்துவர்கள் உரிய ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அந்தத் தம்பதியினர் முன்பே வந்து தங்கியிருந்தனர்.
குழந்தை பிறந்த உடனேயே மூச்சுவிட மிகவும் சிரமப்பட்ட நிலையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. குழந்தையின் உயிரைக் காக்கப் பிறந்த 24 மணி நேரத்திற்குள் திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையில் ரத்த ஓட்டம் சீரமைக்கப்பட்டு குழந்தையின் உயிர் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் 11 நாட்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது முழு ஆரோக்கியத்துடன் தேறியுள்ளது. சுமார் 10000 குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் இத்தகைய அரிய பாதிப்பைச் சரியான நேரத்தில் கண்டறிந்து குணப்படுத்திய மருத்துவர்களைப் பலரும் பாராட்டுகின்றனர். மருத்துவர்களின் இந்தச் சாதனையால் ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரும் அந்தத் தம்பதியின் நீண்ட கால கனவும் நனவாகியுள்ளது.