முறையாக விசாரிக்கவில்லை.. காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் !!

 

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் சாலையோரம் அமர்ந்திருந்த போது அந்த வழியாக வந்த மர்மநபர் ஒருவர் இளைஞருடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது.

இதில் மர்மநபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டத்தில், அப்பகுதி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்தவர் அங்கிருந்து தப்பியோனார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊரான பகவான்பூர் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை என அப்போது மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் கொலையாளியை கைது செய்யாததால் ஆவேசம் அடைந்த கிராமத்தினர், காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள் சிலர் திடீரென காவல் நிலையம் முன்பு இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனங்களை உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் பதற்றமான சூழல் நிலவியது. கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டியடி நடத்தி விரட்டினர்.