திமுக நிர்வாகியின் மகன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு... கரூரில் சோகம்!

 

கரூர் மாவட்டப் பகுதியில் வார இறுதி விடுமுறையைக் கொண்டாட நண்பர்களுடன் தோட்டத்து விவாசயக் கிணற்றில் குளிக்கச் சென்ற 18 வயது இளம் கல்லூரி மாணவர் ஒருவர், எதிர்பாராத விதமாகக் கிணற்று நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் கரூரின் முக்கிய ஆளும்கட்சி நிர்வாகியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திமுக உள்ளூர் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். இவருடைய மகன் சரண்ஜித் நிகில் (18), கோவையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். தற்பொழுது விடுமுறைக்காகக் கரூர் வீட்டிற்கு வந்திருந்த சரண்ஜித் நிகில், நேற்று முன்தினம் தனது நெருங்கிய நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து கரூரை அடுத்த கோவிந்தம்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயத் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள பெரிய விவசாயக் கிணற்றில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இறங்கிக் குளித்து மகிழ்ந்துள்ளனர். அப்போது, கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற சரண்ஜித் நிகிலுக்கு எதிர்பாராத விதமாக நீரில் நீந்த முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் பலனளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நண்பர்கள் கொடுத்த அவசரத் தகவலின் பேரில் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கித் தீவிரமாகத் தேடியதில், சரண்ஜித் நிகிலின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மகனின் உடலைப் பார்த்துப் பெற்றோர் மற்றும் திமுகவினர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இச்சம்பவம் குறித்துக் கரூர் டவுன் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவனின் மரணம் குறித்து நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.