உழைப்பாளர்களின் உண்மைத் தோழன் திமுக... முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து!
நாளை (மே 1) உலகெங்கும் உழைப்பாளர் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உழைக்கும் வர்க்கத்தினருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில், திமுக ஆட்சி அமைந்த காலந்தொறும் தொழிலாளர் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்:
"பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்டாகத்தான் ஆகியிருப்பேன்" என்ற மறைந்த முதல்வர் கலைஞரின் வரிகளைச் சுட்டிக்காட்டிய அவர், மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் போன்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் உருவான வரலாற்றுச் சாதனைகள் என்றார்.
உலக மாமேதை கார்ல் மார்க்சுக்குச் சென்னையில் சிலை அமைத்ததன் மூலம், உழைப்பைப் போற்றுவதில் திமுக முதன்மையாகத் திகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நவீனத் திட்டங்கள் குறித்தும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்:
அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் வாகனப் பழுது பார்க்கும் வாரியத்தில் உள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்குப் புதிய ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு e-Scooter வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவு விநியோகம் மற்றும் இதர இணையப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் இளைப்பாறுவதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
"சொல்லாலும், செயலாலும், வரலாற்றுச் சின்னங்களாலும் உழைப்பைப் போற்றும் இந்த அரசு, பாட்டாளி மக்களின் உயர்வுக்கு என்றும் துணையாக இருக்கும். திமுக உழைப்பாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழும்" என முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.