அமாவாசை தினத்தில் இந்த தவறுகளைச் செய்யாதீங்க... எப்படி வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும்?!

 
இன்று மார்ச் 18ம் தேதி பங்குனி அமாவாசை தினம். இந்நாளில் நம் பித்ருக்களை எவ்வாறு வழிபட்டு திருப்திப்படுத்துவது? எப்படி படையலிட்டால் அவர்கள் திருப்தியடைவார்கள்? எவ்வாறு தர்ப்பணம் செய்வது? என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம் வாங்க.

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வருகிறது. ஆனால் ஆடி மாதம், புரட்டாசி மாதம், தை மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவை. அதைப் போலவே தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி  மாத அமாவாசை தினமும் முன்னோர்களுக்கு வழிபாடுகளை செய்வதற்கு உரிய நாள்.

அமாவாசை நாளில் காகத்துக்கு உணவு வைக்கிறதும் அல்லது மாட்டுக்கு அகத்திக் கீரை கொடுப்பதும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இது பொதுவாக எல்லாருமே செய்யக்கூடிய விஷயம். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கோவில் அல்லது கடல், ஆறு இருக்கும் இடங்களுக்கு சென்று நமது முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுப்பது கூடுதல் சிறப்பு. அமாவாசை தினத்தில் உணவு, உடை, பணம் என ஏதாவது நம்மால் முடிந்த விஷயங்களை தானமாக கொடுக்கலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு தானம் செய்யும் பொழுது பூரணமான பலன் நம்மை வந்து சேரும்.  மாலை நேரத்தில் முன்னோர்களுடைய படத்தை வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அமாவாசை திதி நேற்று துவங்கி இன்று மாலை வரை இருக்கிறது இந்த இடைப்பட்ட நேரத்தில் திருமூர்த்தி பகவானை வழிபாடு செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


நமது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் இந்த அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படி தர்ப்பணம் கொடுக்கும் போது நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் மனதில் நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.  

சூரியன் ஏறு பொழுதில் இருக்கின்ற காலமாக பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அதே போன்று அமாவாசை நாட்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை படையல் போடலாம்.  இன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.  வீட்டில் தினமும் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் புதிதாக ஒரு அகல் விளக்கை ஏற்றலாம்.