போர் எதிரொலி... இந்தியாவில் ஆணுறை விலைகளும் உயர்வு?! பொதுச் சுகாதார வல்லுநர்கள் கவலை!
பாரசீக வளைகுடாப் பகுதியில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, ஆணுறை தயாரிப்பிற்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இயற்கை ரப்பர் லேடெக்ஸைப் பதப்படுத்தத் தேவைப்படும் நீரற்ற அம்மோனியா மற்றும் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படும் சிலிக்கான் எண்ணெய் ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளது. இந்தியா தனது அம்மோனியா தேவையில்லை 86% சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமானிடம் இருந்தே பெறுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதனால் பிப்ரவரி முதல் அம்மோனியாவின் விலை 50% வரை அதிகரித்துள்ளது.
அலுமினியத் தகடு மற்றும் பிவிசி போன்ற பேக்கேஜிங் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது உற்பத்தியாளர்களுக்கு "மும்முனை நெருக்கடியை" ஏற்படுத்தியுள்ளது. எச்.எல்.எல் லைஃப்கேர், மேன்கைண்ட் பார்மா மற்றும் க்யூபிட் லிமிடெட் போன்ற சந்தை முன்னோடிகள், தற்போதைய சூழலில் பழைய விலையிலேயே பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த விலை உயர்வு கடுமையான சமூக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது: விலை அதிகரித்தால், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களில் தொய்வு ஏற்பட்டு, தேவையற்ற கருத்தரிப்புகள் அதிகரிக்கக்கூடும். பாலியல் நோய்கள் (STIs): எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, செயற்கை மூலப்பொருட்கள் மீதான வரி விலக்கு மற்றும் துறைமுகங்களில் இறக்குமதி நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என அகில இந்திய ரப்பர் தொழில்கள் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.