உடனடி அமல்... இன்று முதல் சிலிண்டர் விநியோகத்தில் ஓடிபி நம்பர் கட்டாயம்!

 

இன்று மே 1ம் தேதி முதல் சிலிண்டர் விநியோகத்தில் அதிரடி  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் முறையில்,  நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், சரியான நுகர்வோருக்குச் சிலிண்டர் சென்றடைவதை உறுதி செய்யவும் 'டெலிவரி ஆதெண்டிகேஷன் கோடு' (DAC) என்ற புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.

இதன்படி இன்று மே 1ம் தேதி முதல் சிலிண்டர் விநியோகத்தின் போது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைச் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும்.

இந்த புதிய விதியின்படி, வாடிக்கையாளர் சிலிண்டர் முன்பதிவு செய்தவுடன் அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் (OTP) அனுப்பி வைக்கப்படும். சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் இந்த எண்ணைச் சரியாகத் தெரிவித்து சரிபார்த்த பின்னரே சிலிண்டர் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் சிலிண்டர் திருட்டு மற்றும் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது முழுமையாகத் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்களை கேஸ் ஏஜென்சியுடன் இணைக்கவில்லை என்றால், சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மொபைல் எண்ணைப் புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அதனைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை டெலிவரி நேரத்தில் ஓடிபி எண் வரவில்லை என்றால், ஊழியரிடம் உள்ள செயலி மூலம் அங்கேயே எண்ணைப் புதுப்பித்து ஓடிபி பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறை நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.