தானியங்கி மின் கட்டண வசதி அறிமுகம்...  நுகர்வோருக்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!

 


தமிழ்நாட்டில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் புதிய தானியங்கி மின் கட்டண முறையைத் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகத் தானாகவே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அல்லது ஆதார் அங்கீகாரம் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய வசதியைப் பெற விரும்பும் நுகர்வோர்கள், மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று தங்களது மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர், உங்களது மின் நுகர்வுக்கான கட்டணம் கணக்கிடப்பட்ட பத்தாவது நாளில், உங்களது வங்கிக் கணக்கில் இருந்து மின் கட்டணத் தொகை தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் கடைசி நேரத்தில் மின் கட்டணம் செலுத்த அலைவதையும், தாமதக் கட்டணம் செலுத்துவதையும் பொதுமக்கள் எளிதாகத் தவிர்க்க முடியும்.

இந்தத் தானியங்கி மின் கட்டண சேவைக்காக மின்சார வாரியமோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கிகளோ எவ்விதக் கூடுதல் கட்டணத்தையும் நுகர்வோரிடமிருந்து வசூலிக்காது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கட்டணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டவுடன் நுகர்வோரின் மொபைல் எண்ணிற்கு அதற்கான குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மின் கட்டணம் செலுத்தும் முறையை எளிமையாக்கவும் வெளிப்படைத்தன்மையைக் கூட்டவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.