இனி மின்கட்டண அபராதம் கிடையாது - ‘EB Auto Pay’ திட்டத்தை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்! எப்படிப் பயன்படுத்துவது?

 

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது மாதாந்திர அல்லது இருமாத மின் பயன்பாட்டுக் கட்டணங்களை உரியக் காலக்கெெடுவிற்குள் செலுத்தத் தவறும் போது, மின்சார வாரியம் சார்பில் குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பல நேரங்களில் வேலைப்பளு மற்றும் மறதி காரணமாகப் பொதுமக்கள் இந்த அபராதத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின்கட்டணம் தானாகவே கணக்கழிக்கப்படும் புதிய ஆன்லைன் கட்டண முறையை மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய சேவைக்கு “EB Auto Pay” (தானியங்கி மின் கட்டணச் செலுத்துகை) என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். நுகர்வோர்கள் முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpdcl.org என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள “EB Auto Pay” என்ற புதிய விருப்பத்தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அதனுள் சென்றதும் நுகர்வோர் தங்களது நுகர்வோர் மின் இணைப்பு எண் , தங்களது செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ  விவரங்களைப் பதிவு செய்து இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த “EB Auto Pay” திட்டத்தில் நுகர்வோர் ஒருமுறை தங்களது விவரங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்துவிட்டால், அதன் பிறகு வரும் மாதங்களில் மின் ஊழியர்களால் வீடுகளில் மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்ட 10-ஆவது நாளில், அதற்கான கட்டணத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்துகொள்ளப்படும்.

கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு மின் வாரியம் சார்பில் குறுஞ்செய்தி மூலம் கட்டண விபரங்கள் நினைவூட்டலாக அனுப்பப்படும். இந்த புதிய டிஜிட்டல் முறையின் மூலம் பொதுமக்கள் மின்கட்டணத்தை நேரடி மையங்களுக்குச் சென்றோ அல்லது ஆன்லைனில் தனியாகவோ செலுத்த வேண்டிய அலைச்சல்கள் இனி முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், காலதாமதத்திற்கான மின்கட்டண அபராதத்தையும் 100 சதவீதம் தவிர்க்க முடியும் என மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.