ஈரோட்டில் பரபரப்பு... பயணிகள் ரயில் மோதி 9 ஆடுகள் பலி!
ஈரோடு மாவட்டத்தில் பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மதியம் எதிர்பாராத சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த ரயில் தண்டவாளத்தைச் சில ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் கடக்க முயன்றுள்ளன. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பயணிகள் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கொடூர விபத்தில் ரயிலில் சிக்கிய 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாகப் பலியாகின.
விபத்து குறித்துத் தகவலறிந்த ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி ஆடுகள் கொடூரமாகப் பலியான செய்தியறிந்து அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் தண்டவாளப் பகுதியில் திரண்டனர். பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதேவேளையில் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய சில ஆடுகளைச் சிலர் இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்றதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரயில் தண்டவாளப் பகுதிகளில் கால்நடைகளை மேய்க்கவோ அல்லது கடக்கவோ அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கால்நடை உரிமையாளர்களின் கவனக்குறைவே இதுபோன்ற விபத்துகளுக்குக் முக்கியக் காரணமாக அமைகிறது எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். பயணிகள் ரயில் மோதி 9 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த இந்தச் சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.