துடிதுடிக்க மகளை சுத்தியலால் அடித்தே கொன்ற தந்தை... காதலனுடன் இருந்த வீடியோ வைரலானதால் விபரீதம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான ஆத்திரத்தில், தனது சொந்த மகளையும் தங்கையையும் தந்தை மற்றும் அண்ணன் இணைந்து ஆணவக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா ஃபாரூக் (22). இவர் ஜூஹாபுரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்தார்.
சோபியாவும் ஒரு இளைஞரும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது.
சோபியாவின் நடத்தையைக் கண்டித்த அவரது தந்தை மற்றும் சகோதரர், மற்ற நண்பர்களுடனும் அவர் பேசுவதைத் கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும், தங்கள் சமூகத்தில் குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி அவர்கள் சோபியா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
திட்டமிட்டபடி சோபியாவை சர்கேஜில் உள்ள கெல்ஜிபுரா அருகே ஒரு தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்ற அவரது அண்ணன் ஹபில் ஃபாரூக் (38), அங்கு வைத்து அவரைச் சுத்தியலால் கடுமையாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொலையை ஒரு சாலை விபத்துபோன்று திசைதிருப்பவும் அவர்கள் முயன்றுள்ளனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு, சோபியாவைக் கொடூரமாகக் கொலை செய்ததாக அவரது அண்ணன் ஹபில் ஃபாரூக் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த தந்தை முகமது ஃபாரூக் நவாப்கான் (56) ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.