நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி.. 57 தமிழர்களின் நிலை என்ன? தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு!

 

நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரசுவா பகுதியில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அப்பகுதியிலிருந்த பல கட்டடங்களும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் பலரைக் கண்டறியும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 57 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் பற்றிய இந்த செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா’ சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்று திபெத் எல்லைப் பகுதியில் பயணித்த 57 தமிழர்கள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் ஒரு பேருந்தில் பயணித்த 20 பயணிகள் மட்டுமே தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளதாகச் சுற்றுலா ஏஜென்சி விளக்கம் அளித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள எஞ்சிய 37 தமிழர்களின் நிலையைத் தீவிரமாகக் கண்டறியவும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டணமில்லாத் தொலைபேசி எண்: 1800 309 3793. வெளிநாடு மற்றும் பிற தொடர்புகளுக்கு: 08069009901, 08069009900

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் மேற்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.