FLASH: “ஒன்பது கோளும் ஒன்றாய் காண”.. பிரபல பக்தி பாடாலாசிரியர் கிருதியா காலமானார்!
காரைக்குடியை சொந்த ஊராக கொண்ட பாடலாசிரியர் கிருதியா, சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பக்தி இசை உலகம், சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் தனது தனித்துவமான வரிகளால் முத்திரை பதித்த பன்முகத்தன்மை கொண்ட பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான டாக்டர் கிருதியா நேற்று மாலை சென்னையில் காலமானார். அவரது இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகினரையும், ஆன்மிகப் பிரியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படப் பாடல்களைத் தாண்டி, கிருதியா அவர்களின் பெயர் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கக் காரணம் அவர் எழுதிய பக்திப் பாடல்களே ஆகும். நூற்றுக்கணக்கான ஆன்மீகப் பாடல்களை எழுதியுள்ள இவரது படைப்புகளில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மீது எழுதிய பாடல் இமாலயப் புகழ்பெற்றது.
"ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்..." என்ற உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பாடலை எழுதியவர். நவக்கிரகங்களின் தோஷங்களை நீக்கி நல்வாழ்வு தரும் பிள்ளையார்பட்டி கணேசனைப் போற்றும் இப்பாடல், இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான விநாயகர் ஆலயங்களிலும், ஆன்மீகக் கூட்டங்களிலும், அதிகாலை வேளையிலும் ஒலிக்கும் முதன்மைப் பாடலாகக் காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பிரபல பக்தி இசைப் பாடகர் வீரமணி தாசன் குரலில் வெளியான புகழ்பெற்ற 'படி பூஜை' ஆல்பத்தில் இடம்பெற்ற ஐயப்பன் பாடல்கள் மூலம் கிருதியா பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார்.
ஆன்மிகப் பிரியர்களின் மனதோடு ஒன்றிப்போன இவரது புகழ்பெற்ற படைப்புகளான 'லம்போதரா கணநாயக', 'மத யானை', 'கட்டுவழிப் பாதையிலே' ஆகியவை இன்றளவிலும் அதிகம் கேட்கப்படுகிற பாடல்களாக உள்ளன.
மென்மையான காதல் வரிகளாக இருந்தாலும், துள்ளலான பாடல்களாக இருந்தாலும் சரி, தனது தனித்துவமான பாணியால் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் கிருதியா. தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். துள்ளித் திரிந்த காலம், அஜித்தின் பரமசிவன் ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு (2016) தில்லுக்கு துட்டு (2016) திரைப்படத்தில், பிரபல இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைப்பில் இடம்பெற்ற 'சிவன் மகன்டா' என்ற சூப்பர் ஹிட் பாடலை எழுதியவர் கிருதியா ஆவார். இதுமட்டுமன்றி, பல முன்னணி தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் இவர் புகழ்பெற்ற தலைப்புப் பாடல்களை எழுதியுள்ளார்.
கவித்துவ ஆழமும் கலாச்சாரச் செழுமையும் கொண்ட எளிய வரிகளின் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களைத் தொட்ட டாக்டர் கிருதியாவின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் இசை உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது மறைவுக்குத் திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.