பிரபல நாட்டுப்புற பாடகர் ரிங்கு ராஜ்வாடா சாலை விபத்தில் பலி!

 

 உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் மிடாகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறப் பாடகர் ரிங்கு ராஜ்வாடா (வயது 31), சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்பகுதியில் பல்வேறு கோவில் விழாக்களில் ஆன்மிக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி இவர் மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரிங்கு ராஜ்வாடா நேற்று மதுரா மாவட்டம் பராலியில் இருந்து பராக் நகருக்கு இருசக்கர வாகனத்தில் (பைக்) சென்று கொண்டிருந்தார். அவர் நெடுஞ்சாலையில் பல்தேவ் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது பைக் மீது மோதியது.இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த ரிங்கு ராஜ்வாடாவை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

பிரபல நாட்டுப்புறப் பாடகர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.