தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து காலமானார் - தலைவர்கள் இரங்கல்!

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். காளிமுத்து நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. அவரது இறுதிச்சடங்கில் காங்கிரஸ் தொண்டர்கள், தாராபுரம் பகுதி மக்கள் கலந்துக் கொண்டனர். 

வி.எஸ். காளிமுத்து, அடிமட்டத் தொண்டனாகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி, படிப்படியாகக் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு உயர்ந்தவர்: கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 முதல் 2021 வரை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, தொகுதி மேம்பாட்டிற்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.

சட்டமன்ற உறுப்பினராகும் முன்னரே, வீராட்சிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றி, உள்ளாட்சி நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் பெற்றிருந்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், கட்சியின் வளர்ச்சிக்குத் தாராபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெரும் பங்காற்றியுள்ளார்.

இவரது மறைவுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிய ஒரு எளிய மனிதரை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது" எனப் பலரும் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.