விநாயகர் சதுர்த்தி... பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி? ஈஸியான ரெசிப்பி!

 

ஆவணி மாதத்தில் அமாவாசையைத் தொடர்ந்து வருகின்ற 4 வது திதி விநாயகர் சதுர்த்தி. கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது எப்படி பூர்த்தியாகும்? அதிலும் அந்த கொழுக்கட்டையில் பூர்ணத்தை வைத்தால் தானே வழிபாடு பூர்த்தியாகும்? விநாயகருக்கு மிகவும் பிடித்த பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் நைவேத்தியம் படைக்க எள்ளு பூரணக் கொழுக்கட்டை எப்படி செய்வது? என்பதைப் பார்க்கலாம். ரொம்ப ஈஸியான ரெசிப்பி. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1/4கிலோ
வெள்ளை எள் – 50கி
வெல்லம் – 50கி
நெய் – 3டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1சிட்டிகை

செய்முறை:

பச்சரிசியை 1மணி நேரம் ஊற வைத்து ஈரத்துணியில் உலர்த்தி எடுக்கவும். மிக்சியில் அரைத்து மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். 4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

எள்ளு பூரணம்:

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்து ஆறியதும், பொடித்து கொள்ளவும். அதிலேயே வெல்லத்தூளைப் போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்ததும் அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

விரல்களில் எண்ணெய் தடவி எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரித்து கிண்ணம் போல் செய்யவும்.

அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். எல்லா மாவையும் இப்படியே செய்து வைக்கவும்.

இட்லி தட்டில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிடவும். அசத்தலான சுவையில் எள்ளு பூரணம் கொழுக்கட்டை தயார்.