பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிமுக நிர்வாகி, மறத்தமிழர் சேனை தலைவர் உள்பட 5 பேர் கைது !! 

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தனியார் பள்ளியில் 15 வயது மாணவி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில நாட்களாக தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது எதையும் கூற மறுத்துவிட்டார்.

எனினும், வீட்டின் அருகே வசித்துவரும் கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) இருவர் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிர் காவல்துறையில் புகார் அளித்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (44), பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான ராஜா முகமதுவும்(36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் மறத்தமிழர் சேனை மாநில தலைவர் புதுமலர் பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத்துக்கு, அதிமுக கவுன்சிலர் சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.  

பின்னர் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோரை மடக்கி பிடித்தவர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை புகார் உறுதியானது. இதனையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
அதே போல், காம கொடூரர்களுக்கு உதவிய கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூரத்தில் மேலும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்  எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.