கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் வரம்பு கிராமுக்கு ₹10,000 ஆக உயர்வு!
தங்கத்தின் சந்தை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகையை உயர்த்தக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு ₹8,000 முதல் ₹9,000 வரை கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை அதிகபட்சமாக ₹10,000 வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிய நடைமுறைகள் மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாகக் கிராமப்புற மற்றும் நடுத்தர மக்கள் கூட்டுறவு வங்கிகளையே பெரிதும் நம்பியுள்ளனர். விவசாயம், கல்வி, மருத்துவச் செலவு மற்றும் சிறு தொழில் தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைப்பவர்கள், இந்தத் தொகை உயர்வினால் கூடுதல் நிதி வசதியைப் பெற முடியும்.