அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை.. நாளை தமிழகத்தில் 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகத்தில் 3 மாவட்டங்களில் தொடர் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளன. ஆடிப்பூரம் திருவிழா, ஆண்டாள் திருத்தேர் திருவிழா, பரலோக மாதா விண்ணேற்பு திருவிழா என விருதுநகர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ஆகஸ்ட் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலின் புகழ்பெற்ற ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஆடிப்பூரப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு நாளை  ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறையைத் தொடர்ந்து, நாளை  மறுதினம் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம் - அரசு பொது விடுமுறை) மற்றும் ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.