9 வயதில் விருந்தினர்; 24 வயதில் அதே நபருக்கு மணமகள் - வைரலாகும் பெண்ணின் கதை!
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், தன்னை விட 38 வயது மூத்த ஒருவரைத் திருமணம் செய்துள்ள நிலையில், தான் 9 வயதாக இருந்தபோது தற்போதைய கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு விருந்தினராகச் சென்ற புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ரெனெடா ஃபதியா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 62 வயது நபருக்கும் இடையே கடந்த சில காலத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டு, பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு ஒருநாள், ரெனெடா தனது கணவரின் வீட்டில் இருந்த பழைய புகைப்பட ஆல்பங்களை எதேச்சையாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அவரது கணவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்கள் இருந்துள்ளன.
அந்தப் பழைய புகைப்படங்களை ரெனெடா உற்று நோக்கியபோது, அதில் மணமகனாக இருக்கும் தனது கணவரின் அருகில், ஒரு சிறிய ஒன்பது வயது சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். அந்தச் சிறுமியின் முகத்தை உற்றுப் பார்த்தபோது, அது வேறு யாருமல்ல, அவருடைய சொந்த சிறுவயதுப் புகைப்படம் தான் என்பதை அறிந்து அவர் உறைந்து போனார்.
அதாவது, ரெனெடா 9 வயதுச் சிறுமியாக இருந்தபோது, தனது குடும்பத்தினருடன் தற்போதைய கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு விருந்தினராகச் சென்றுள்ளார். அப்போது மணமக்களுடன் எதேச்சையாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அந்த ஆல்பத்தில் இருந்துள்ளது. காலம் என்னும் சுழற்சியில், அதே நபர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த பிறகு, 15 ஆண்டுகள் கழித்து அதே சிறுமி (தற்போது 24 வயது இளம்பெண்) அவருக்கு மூன்றாவது மனைவியாக மாறியுள்ளார்.
இந்த விசித்திரமான உண்மை தெரிந்ததும் அந்தப் பழைய புகைப்படத்தையும், தாங்கள் தம்பதியாக இருக்கும் புதிய புகைப்படத்தையும் இணைத்து ரெனெடா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி விவாதங்களை உருவாக்கியது. இதற்கிடையே, தனது கணவரின் முந்தைய திருமண முறிவிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், அவர் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னரே தாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும் ரெனெடா விளக்கமளித்துள்ளார்.