காலையிலேயே மகிழ்ச்சி... மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்குகளில் வரவு!
தமிழக அரசின் மிக முக்கியத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், நடப்பு சூலை மாதத்திற்கான ரூ.1,000 நிதியுதவி இன்று ஜூலை 15 முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகத் தடையின்றி வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் தகுதியான மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்படும் என்ற நடைமுறையின்படி, இந்த மாதமும் உரிய நேரத்தில் நிதி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள கோடிக்கும் மேற்பட்ட தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று அதிகாலை முதலே ரூ.1,000 நிதி வரவு வைக்கப்பட்டு, அதற்கான குறுஞ்செய்திகளும் பயனாளிகளின் மொபைல் எண்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த மாதமும் எந்தவொரு தடையுமின்றி வழக்கமான தொகையான ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து அரசு வட்டாரங்களில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வரும் வேளையில், இந்த மாதம் ஏன் அந்தத் தொகை வரவில்லை என்பது குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது அரசின் தீவிர ஆலோசனையில் இருந்தாலும், நடப்பு நிதியாண்டின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரியவந்துள்ளது.
பட்ஜெட்டில் இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு முறையான ஒப்புதல் பெற்ற பிறகே இந்த உயர்வு அமலுக்கு வரும் என்பதால், அதுவரை வழக்கமான தொகையே தொடரும் எனத் தெரிகிறது. உரிமைத் தொகை தங்களது கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யப் பயனாளிகள் தங்களது வங்கிச் செயலிகள் அல்லது ஏடிஎம் மையங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.