அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை செப்.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 

புதுச்சேரியில் சகோதரர் வீட்டிற்குள் புகுந்து தாக்கியதாகத் தொடரப்பட்ட அடிதடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு இம்மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள தனது சகோதரர் மரிய குளோத் என்பவரது வீட்டிற்குள் புகுந்து தாக்கியதாகத் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியும், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வாதாடுவதற்கு அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அவகாசம் கோரினர்.

வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.