ஆப்கானிஸ்தானில் கோர தாண்டவமாடும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் நுரிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் அதிகனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கால் பரன் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தக் கொடூர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுப் போராடி வருகின்றனர். அதேவேளையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுச் சகதிக்குள் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் வேகமெடுத்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மீட்புக் படையினருக்குப் பெரும் சவால்கள் நிலவி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களும் மருத்துவ உதவிகளும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் பல சிரமங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படுகின்றன. இயற்கையின் இந்த திடீர் சீற்றத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் துயரத்திலும் கடும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.