பெங்களூருவில் கொடூரம்... கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நாய் சங்கிலியால் நெரித்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை!

 

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கணவன் - மனைவிக்கும் இடையேயான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 4 மாத கர்ப்பிணி மனைவியின் கழுத்தை, நாய் கட்டும் சங்கிலியால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதே சங்கிலியால் கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத நிகழ்வு குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் மனோஜ்(30) என்ற தச்சுத் தொழிலாளி, தனது மனைவி ஸ்வப்னாவுடன் வசித்து வந்தார். இவர்களது குடும்பம் பூர்வீகமாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், மனோஜ் பெங்களூருவிலேயே பிறந்து வளர்ந்தவர். இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், மனோஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தற்போது ஸ்வப்னா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மனோஜுக்கும், ஸ்வப்னாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மனோஜ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மதியம் அவர்களது படுக்கையறைக்குள் மீண்டும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ், வீட்டில் இருந்த நாய் கட்டும் சங்கிலியை எடுத்துத் தன் மனைவி ஸ்வப்னாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் அதே சங்கிலியால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.