நைஜீரியாவில் கொடூரம்... போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழப்பு!
நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணமான போர்னோவில், பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 11 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் புகழ்பெற்ற சம்பீசா வனப்பகுதியை ஒட்டியுள்ள புபாகு என்ற கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த ஆயுதமேந்திய கும்பல், அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு போகோ ஹரம் என்ற பயங்கரவாத அமைப்பே காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று இறுதிச்சடங்குகளுக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டன.
போகோ ஹரம் மற்றும் ஐ.எஸ். (ISIS) அமைப்புடன் தொடர்புடைய லகுரவா போன்ற குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பணயத் தொகை கேட்டு மக்களைக் கடத்துவது மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்களில் ஈடுபடும் கும்பல்களின் அட்டூழியம் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இவர்கள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி, கால்நடைகளையும் தானியங்களையும் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.