ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம் - ஆன்லைனில் எப்படி ஈஸியாக அப்டேட் செய்வது?!
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பொதுவாக ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் 'Myaadhaar' இணையதளம் வழியாக இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.
முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகிய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க வேண்டும் என UIDAI அறிவுறுத்தியுள்ளது.
எப்படிப் புதுப்பிப்பது?
பயனர்கள் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தங்களின் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் லாக்-இன் செய்து, 'Document Update' என்ற வசதியைப் பயன்படுத்தி இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம். குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரை ஒருமுறை கூடப் புதுப்பிக்காதவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.