கஷ்டங்கள் தீர்க்கும் ராம நவமி - வீட்டிலேயே எளிமையாக எப்படி வழிபடுவது? வழிமுறைகளும், பலன்களும்!

 

இன்று மார்ச் 26, வியாழக்கிழமை ராம நவமி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி, செல்வச் செழிப்பு பெருக ராமரை இன்று எப்படி எளிமையாக வழிபடலாம் என்று பார்க்கலாம். மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமர் பிறந்த தினமான இன்று, அவரை மனதார வேண்டி வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பது ஐதீகம். இன்று நிலவும் 'ரவி யோகம்' இந்த வழிபாட்டிற்கு இன்னும் கூடுதல் பலனைத் தருகிறது.

இன்று நாள் முழுவதும் நவமி திதி இருப்பதால், காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், குறிப்பாக, ராமர் பிறந்ததாகக் கருதப்படும் நண்பகல் வேளையில் 11:05 மணி முதல் 1:35 மணி வரையிலும் வழிபாடு செய்வது மிகச் சிறந்தது.

வீட்டில் செய்ய வேண்டிய எளிய பூஜை:

ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படம் அல்லது ஆஞ்சநேயர் படம் இருந்தால் அதற்குத் துளசி மாலை அணிவித்து அலங்கரிக்கவும். படம் இல்லாதவர்கள் ஒரு நெய் தீபத்தையே ராமராகப் பாவித்து வழிபடலாம். ராமருக்கு மிகவும் பிடித்த நீர்மோர், பானகம், வடை பருப்பு ஆகியவற்றைப் படைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் வைப்பதும் விசேஷமானது. படத்தின் முன் அமர்ந்து "ஸ்ரீ ராம ஜெயம்" அல்லது "ராம ராம" என்ற நாமத்தை 108 அல்லது 308 முறை சொல்லுங்கள். இது மன அமைதியையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தரும்.

அதன் பின்னர் இன்று அருகில் உள்ள ராமர் அல்லது பெருமாள் கோவிலுக்குச் சென்று ராமருக்குத் துளசி மாலை சாற்றி வழிபடுவது உங்கள் கஷ்டங்களை வேரோடு நீக்கும். கோடை காலம் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் அல்லது விசிறி போன்றவற்றைத் தானமாக வழங்குவது மகா புண்ணியத்தைத் தரும். ராம நவமி தினமான இன்று அனுமனை வழிபடுவதன் மூலம் பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.

ராம நவமி விரதம் இருந்து ராம நாமத்தைச் சொல்பவர்களுக்கு குடும்பத்தில் நிலவும் சண்டைகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாள் தீராத பணக் கஷ்டங்கள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.