undefined

மக்களால் நான், மக்களுக்காக நான் - கர்ஜனை பெண்மணி ஜெயலலிதா நினைவலைகள் | 78வது பிறந்தநாள் ஸ்பெஷல்!

 

“மக்களால் நான்… மக்களுக்காக நான்” என்று கர்ஜித்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த தினத்தை இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

திரை உலகில் இருந்து அரசியலுக்குத் தன்னிகரில்லா தைரியத்துடன் வந்த அவர், ஆண்கள் ஆட்சி செய்த அரசியல் களத்தில் பெண்களும் உயர முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். 1982ல் எம்.ஜி.ஆர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து, சில ஆண்டுகளில் அரசியல் மேடையில் பெரிய எழுச்சியை பெற்றார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட இரு அணித் தொடரில் வெற்றி பெற்று, ஒருங்கிணைந்த அதிமுகவின் தலைவரான ஜெயலலிதா, 1991 முதல் 2016 வரை நான்கு முறை முதல்-அமைச்சராக பதவி வகித்தார். முதல் முறை பதவியேற்கும் போது சம்பள காசோலையை கூட மறுத்து, ரூ.1 மட்டும் ஏற்கும் எளிமையை வெளிப்படுத்தினார். தொட்டில் குழந்தை திட்டம், பெண்களுக்கு காவல் துறையில் இடஒதுக்கீடு, அம்மா உணவகம், இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு-மாடு போன்ற பல மக்கள் நல திட்டங்கள் மாநிலத்தெங்கும் பரவலாக வரவேற்கப்பட்டன.

ஹோலி ஏஞ்சல்ஸ் மற்றும் சர்ச் பார்க் பள்ளிகளில் கல்வி கற்ற அவர், நடிகையாக 115 படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்த புகழ், அவரை நேரடியாக மக்களிடையே கொண்டு சென்றது. 2016ல் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 70 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் மீளாமல் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.

“எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதிமுக இயங்கும்” என்ற அவரது நம்பிக்கை இன்று கேள்விக்குறியாக இருந்தாலும், அவர் உருவாக்கிய தடம் தமிழக அரசியலில் இன்று வரையிலும் அழியாததாகவே உள்ளது.