“மக்கள் சேவை செய்வேன்” - மாரியம்மன் சாட்சியாகச் சத்தியம் செய்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பிரச்சாரம்!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறிப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தொகுதிக்குட்பட்ட சிறுநல்லூர் ஸ்ரீமாரி எல்லையம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
சில கிராமப் பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், சிறுநல்லூர் பகுதியில் கிராம மக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது மாரியம்மன் சாட்சியாகவும், மக்கள் சாட்சியாகவும் தான் எப்போதுமே மக்கள் சேவை செய்வேன் என்று அவர் சத்தியம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, வீராணம் பகுதியில் மரகதம் குமரவேல் பிரச்சாரத்திற்குச் சென்றபோது, கிராமத்திற்குள் வரக்கூடாது என்று ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.