இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் வி.ஆர்.முத்து காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!
பிரபல இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் நிறுவன தலைவர் வி.ஆர். முத்து உடல்நலக்குறைவால் கடந்த மார்ச் 4ம் தேதி இரவு காலமானார். அவருக்கு வயது 72.
விருதுநகரில் பிறந்த வி.ஆர்.முத்து கடந்த 1986ம் ஆண்டு தனது தந்தையுடன் இணைந்து இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தை தொடங்கி, அதை உலகம் முழுவதும் அறியப்படும் அளவிற்கு வளர்த்தார்.
அவரது தலைமையில் இதயம் குழுமம் கடலை எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு சமையல் எண்ணெய் வகைகளை அறிமுகப்படுத்தியது. மேலும், 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து, இந்தியாவின் முன்னணி உணவு எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றாக இதயம் நிறுவனத்தை உருவாக்கினார்.
தொழில்துறையில் மட்டுமல்லாமல் சமூகப்பணிகளிலும் வி.ஆர்.முத்து முக்கிய பங்கு வகித்தார். ரோட்டரி சர்வதேச அமைப்பின் ஆளுநராக பணியாற்றியதுடன், பல கல்வி நிறுவனங்களின் அறங்காவலராகவும் இருந்து கல்வி மற்றும் சமூக நலத்திற்காக பல சேவைகளை செய்துள்ளார்.