பெண்ணின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்த 'இன்ஸ்டா பிரபலம்'... காவலரின் மூக்கு உடைப்பு - காசிமேடில் அரங்கேறிய கொடூரம்!
சென்னை காசிமேடு பகுதியில் 'காசிமேடு மீனவன்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பிரபலமான கவின் என்பவர், 15 வயது சிறுமி என்றும் பாராமல் நிகழ்த்திய வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையா அல்லது புகழின் போதையா என்று தெரியாத அளவுக்கு அவர் செய்த அராஜகம் தற்போது அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.
காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் கவின் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது வாகனம் மோதியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுமி கவினிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சிறுமி கேள்வி கேட்கிறாளே என்ற ஆத்திரத்தில், கவின் அந்தச் சிறுமியின் வயிற்றிலும், பிறப்புறுப்பிலும் ஓங்கி எட்டி உதைத்துள்ளார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிறுமியைத் தாக்கியதைத் தட்டிக்கேட்க வந்த அவரது தந்தை நாகராஜையும் கவின் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தடுக்க வந்த பெண்கள் மற்றும் அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையும் அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு கவினைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காசிமேடு காவல் நிலைய காவலர் பவித்ரன், ஆவேசமான கும்பலிடமிருந்து கவினை மீட்க முயன்றார். அப்போது பொதுமக்கள் கவினை நோக்கி எறிந்த கற்கள் தவறுதலாகக் காவலர் பவித்ரனின் மூக்கை பதம் பார்த்தது. மூக்குத்தண்டு உடைந்து ரத்தம் கொட்டிய நிலையிலும், கடமை தவறாத காவலர் பவித்ரன், கவினைப் பொதுமக்களின் தாக்குதலில் இருந்து பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காசிமேடு போலீசார் கவின் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவின் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் கவினைத் தாக்கியதற்காகச் சிறுமியின் தந்தை நாகராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.