மத்திய அரசின் 'மாஸ்டர் பிளான்' - அடையாள அட்டை இருந்தால் உடனடி சிலிண்டர் விநியோகம்... நடைமுறைக்கு வருகிறது 5 கிலோ சிலிண்டர்!
சர்வதேச எரிசக்தி நெருக்கடியால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பொதுமக்களின் கவலையைத் தணிக்க, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று காலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
14.2 கிலோ எடையுள்ள பாரம்பரிய சிலிண்டர்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் மக்கள் 'பீதி கொள்முதல்' (Panic buying) செய்வதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து எல்பிஜி விநியோகஸ்தர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ "சோட்டு" சிலிண்டர்கள் நேரடியாகக் கிடைக்கும். முறையான அடையாள அட்டை ஒன்றைச் சமர்ப்பித்து, கவுண்டர்களிலேயே இந்தச் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் முக்கியமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைக் கருத்தில் கொண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை சற்றே உயர்ந்துள்ளது. இது உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு (Food Inflation) வழிவகுக்கலாம் என்ற கவலை எழுந்துள்ள நிலையில், சிறிய சிலிண்டர்களின் தாராள விநியோகம் ஏழை எளிய மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அரசு நம்புகிறது.
"ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியாவிடம் போதுமான அளவு மூலோபாய எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பு (Strategic Reserves) உள்ளது. பல வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் நம்மிடம் இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்," எனப் பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.