மத்திய கிழக்கில் மூண்டது பெரும் போர்...  ஈராக்கின் 7 மாகாணங்களில் அமெரிக்கா-சவுதி கூட்டு ஏவுகணைத் தாக்குதல்!

 

சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் வயல்களை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சவுதி அரேபியா குற்றம் சுமத்தியிருந்தது. இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா படைகள் உடனடியாகக் களம் இறங்கின. ஈராக்கில் உள்ள கிளர்ச்சியாளர்களின் முக்கிய தளங்களைக் குறிவைத்து இரு நாடுகளும் இணைந்த பிரம்மாண்ட கூட்டு ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கின.

ஈராக்கின் 7 முக்கிய மாகாணங்களில் உள்ள கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த அதிதீவிர கூட்டுத் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32-க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்களின் வெடிமருந்து கிடங்குகள் மற்றும் முக்கியத் தளபதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்து தரைமட்டமாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் இந்த அதிரடிப் பதிலடித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் அடுத்தகட்டமாகப் பதிலடித் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்பதால் சர்வதேச நாடுகள் கலக்கமடைந்துள்ளன.