விஜய் புகார் காரணமா? ஒரே நாளில் ஐஜி, கமிஷ்னர்கள் மாற்றம் - தேர்தல் ஆணையத்தின் மெகா 'சர்ஜரி'!

 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று திடீரென உத்தரவு பிறப்பித்தது. ஒரே நாளில் டிஜிபி முதல் ஜஜி வரையில் மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தமிழக காவல்துறை உயர்மட்டத்தில் இந்த மாற்றம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இது வரை பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் தற்போது பதவியில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருந்த அமல்ராஜும் தூக்கியடிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சஞ்சாய் குமார் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல ஐஜியாக இருந்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு ரம்யா பாரதி புதிய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அதிகாரிகளின் இந்த அதிரடி இடமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அடுத்தடுத்த மாற்றங்களுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அதிகாரிகளின் நியமனம் மூலம் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது. டிஜிபி முதல் ஐஜி வரை ஒரே நேரத்தில் மாற்றப்பட்ட சம்பவம் தமிழக காவல்துறையில் பணியாற்றும் மற்ற உயர் அதிகாரிகளிடையே தற்போது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.