யார் என்னுடன் பேசினார்கள் என்பது ரகசியம்... செங்கோட்டையன் சஸ்பென்ஸ்!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவர் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சந்தேகங்கள் எழுந்த நிலையில், செங்கோட்டையன் தற்போது அதனை மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சென்றிருந்ததாகவும், எந்த அரசியல் சந்திப்பும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்திற்கு திரும்பிய செங்கோட்டையன், “சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. மனைவியின் சிகிச்சைக்காகச் சென்று, சொந்த வேலைகளை முடித்துவிட்டுத் திரும்பினேன். தற்போதைய சூழலில் சந்திப்புகளுக்கு வாய்ப்பில்லை,” என பேசியுள்ளார்.
அரசியல் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் யாருடனும் பேசவில்லை என திட்டவட்டமாக கூறிஉள்ளார். “யார் என்னுடன் பேசினார்கள் என்பது ரகசியம். பல நண்பர்கள் என்னுடன் உரையாடுகின்றனர். அவர்களிடம் ஒருமித்த கருத்துகள் உள்ளன,” என பதில் அளித்துள்ளார்.
இப்போதுள்ள சூழலில் யாரையும் நான் சந்திக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம் அதிமுக வலிமை பெற வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் நோக்கம். 100 ஆண்டுகள் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற அம்மாவின் கனவு நிறைவேற வேண்டும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.