மொத்தமா மாறுது... காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை... கர்நாடகாவில் வேகமாக நிரம்பும் அணைகள்!

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மைசூர் அருகே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக உயர்ந்துள்ளது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் விநாடிக்கு 8,000 முதல் 10,000 கன அடி வரை உபரிநீர் ஆற்றில் திறக்கப்படலாம் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 10,504 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகள் தங்களின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் முழுவதும் தமிழக எல்லையை வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.