நள்ளிரவில் 5000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்துடன் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத திருவிழா!
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியில் போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோயில் அமைந்துள்ளது.மலைவாழ் மக்களின் குலதெய்வமான இந்தக் கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்வதோடு, மலைவாழ் குடும்பத்தினரே கோயில் பூசாரியாகவும் இருந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி சமபந்தி விருந்து நடைபெறும். இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையில் 28 ஆடுகள், 29 சேவல்கள், 28 பன்றிகள் என முப்பூஜை பலிகள் இடப்பட்டன. தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ப.சிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையல் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே சமையல் செய்தனர். சமைத்த அசைவ உணவை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வைத்து பரிமாறினர்.