விஷம் குடித்து ‘கார்கில்’ போர் வீரர் தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் அனுமதி!
இந்திய ராணுவத்தில் கார்கில் போரின் போது படுகாயமடைந்து ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் என்.கே.சிவானந்த ரெட்டி, தனக்குரிய நிலம் மற்றும் ராணுவச் சலுகைகள் நீண்ட காலமாக தனக்கு வழங்கப்படாததால், தொடர் முயற்சிகள் செய்தும் அதிகாரிகளால் தாமதம் செய்யப்படுவதில் மனவேதனையடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவானந்த ரெட்டி இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த 1999 கார்கில் போரின்போது போர்க்களத்தில் காயமடைந்த அவர், கடந்த 2000-ம் ஆண்டில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற நாளில் இருந்து கடந்த 24 ஆண்டுகளாகத் தனக்குச் சட்டப்பூர்வமாகச் சேர வேண்டிய நிலம் மற்றும் ராணுவச் சலுகைகளைப் பெறுவதற்காக அவர் அரசு அலுவலகங்களை நாடித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உரிய சலுகைகள் கிடைக்காமல் அரசுத் துறைகளின் அதிகாரிகளால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரது நிலையைக் கருத்தில் கொண்டு உரிய விரைவான தீர்வை வழங்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.