மேகதாது அணை விவகாரத்தில்  13 பேர் கொண்ட குழுவுடன்  கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

 

கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நதிநீரைப் பகிர்ந்து கொள்வதில் நீண்டகாலமாகப் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டக் கர்நாடக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முக்கியப் பிரச்சினைகளுக்குச் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணத் தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரைச் சந்தித்துப் பேசத் தமிழக முதலமைச்சர் திட்டம் வகுத்துள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி திங்கட்கிழமை அவர் பெங்களூரு நகருக்கு நேரில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பெங்களூரு விதானசவுதா சட்டமன்ற வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் இந்த முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய்யுடன் கர்நாடகா செல்லவுள்ள 13 பேர் கொண்ட குழுவின் பட்டியல் வெளியாகியுள்ளது. இக்குழுவில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் உமாபதி ஆகியோரும் பயணம் மேற்கொள்கின்றனர்.