டெல்லியில் மாணவர்கள் மீது மீண்டும் தடியடி; இணைய சேவை துண்டிப்பு!

 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராடி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நேற்றிரவும் மீண்டும் தடியடி நடத்தியுள்ளனர்.

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் நேற்றிரவு திடீரெனத் தடியடி நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் மீண்டும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது. வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையச் சேவைகள் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. போராட்ட களத்தில் சூழலைச் சீரமைக்கவும், காயமடைந்த மாணவர்களுக்கு உதவவும் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சி.ஜே.பி. அமைப்பின் நிர்வாகிகள், "காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் மாணவர்கள் அனைவரும் பதற்றமடையாமல் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.