லிஃப்ட்டில் சிக்கி பெண் பலி... நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் தனது மகள் மற்றும் பேரனுடன் சென்ற 55 வயது பெண்மணி லிஃப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர்கள் சென்ற லிஃப்ட்டின் கதவு சரியாக மூடப்படாமல் திடீரென கீழே இறங்கியது. இந்த எதிர்பாராத கோளாறால் லிஃப்ட்டின் நடுவில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராடி பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்ட லிஃப்ட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிஃப்ட் பழுது காரணமாக நேர்ந்த இந்த உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.