ட்ரம்ப் நோபல் பரிசை வாங்கிடுவார் போல இருக்கே... பதறும் உலக நாடுகள்... போர் விமானங்களை பறக்கவிட்டு கெத்து காட்டிய சீனா!

 

ஒரு பக்கம் அமெரிக்கா முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. எப்படியும் நோபல் பரிசை தட்டிச் செல்வது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் டிரம்ப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போகிற போக்கைப் பார்த்தால், அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்தி சமாதானம் செய்து வைத்தேன் என்று மல்லுக்கு நிற்கும் முடிவில் இருக்கிறார். இந்நிலையில், ஈரான், ஈராக், இஸ்ரேல், போர் பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒரு பக்கம் மல்லுக்கு நிற்கிறது.

போதாக்குறைக்கு நாங்களும் ரவுடி தான் என்று வடகொரியா கிம் அவ்வப்போது பட்டாசு வெடிப்பது போல வெடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், டிரம்ப் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சமயமாகப் பார்த்து, சம்பந்தமே இல்லாமல் தைவான் வான்வெளியில் சீனா மீண்டும் தனது போர் விமானங்களை ஏவி இருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுயாட்சி பெற்ற தீவான தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று மட்டும் சீனா 26 போர் விமானங்களைத் தைவானை நோக்கி அனுப்பியுள்ளது. இதில் 16 விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 9 வரை சீனா தனது ஊடுருவல்களைத் திடீரென குறைத்திருந்தது (கடந்த ஆண்டு இதே காலத்தில் 86 விமானங்கள் அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 2 விமானங்கள் மட்டுமே அனுப்பப்பட்டன). தற்போது மீண்டும் ஊடுருவல் உச்சகட்டத்தை எட்டியிருப்பது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ஒரு மூலோபாய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையில் அமெரிக்கா தைவானுக்கு மிகப் பெரிய அளவிலான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் குறைப்பதும், பின் மீண்டும் அதிகரிப்பதும் ஒரு வகையான 'பேரம் பேசும்' கருவியாக இருக்கலாம். அமெரிக்காவுடன் தற்போது நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் சில சலுகைகளைப் பெற இந்த மிரட்டல் அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ கூறுகையில், "விமானங்கள் வராத நேரத்திலும் சீனப் போர்க்கப்பல்கள் தைவானைச் சுற்றித் தான் இருந்தன. சீனா நம்மை முற்றுகையிடும் திட்டத்தை ஒருபோதும் கைவிடவில்லை" என எச்சரித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 29-30 தேதிகளில், சீனா தைவானை முழுமையாக முற்றுகையிட்டு அடிமைப்படுத்துவதை போன்ற ஒரு பிரம்மாண்ட போர் பயிற்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் "தொடர்பு இல்லாத" அமைதி நிலை, எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலுக்குச் சீனா தயாராகிறதா என்ற அச்சத்தைப் பென்டகன் அதிகாரிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் டிரம்ப் சீனாவுக்குச் செல்லும் போது, தைவான் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பாரா அல்லது வர்த்தக ஒப்பந்தத்திற்காக விட்டுக்கொடுப்பாரா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. தைவான் பாராளுமன்றம் ஏற்கனவே அமெரிக்க ஆயுத ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளன.